தேர்தலுக்கு தயாராகும் ரணில் - 13 குறித்து பேச அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவையுடைய ஒருவர் அடுத்த அதிபராக பதவியேற்பார் என அக்கட்சியின் உறுப்பினரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிபர் தேர்தல் நடைபெறுமெனவும் - பெரமுனவினர் சிலர் ரணில் விக்ரமசிங்கவே தமது அடுத்த அதிபர் வேட்பாளர் என தெரிவித்து வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பெரமுன தலைமையில் அடுத்த அரசாங்கம்

இலங்கையின் பொருளாதர நிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மேலும் மேம்படுமெனவும், இதனைத் தொடர்ந்து நாட்டில் தேர்தல் நடத்தப்படுமெனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் கொரோனா தொற்றின் போதும் தமது கட்சியின் தலைவர்கள் நாட்டை காப்பாற்றியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.
இந்தப் பின்னணியில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் தமது கட்சி போட்டியிடுமெனவும் வெற்றியீட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அடுத்த அரசாங்கம் அமைக்கப்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், தமது கட்சி உறுப்பினர்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.
மகா கூட்டணி

பிரசன்ன ரணதுங்கவின் கருத்து இப்படி இருக்க, எதிர்வரும் அதிபர் மற்றும் பொதுத் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மகா கூட்டணி போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
வத்தளையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய விஜேவர்தன, விரைவில் உருவாக்கப்படவுள்ள மகா கூட்டணியின் பிரதான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கும் என்றார்.
சர்வ கட்சி கூட்டம்

இதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வுக்கான இணக்கத்தை எட்டும் நோக்கத்துடன் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வ கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.