ரணிலுடன் முக்கிய பேச்சு - கைமாறப் போகும் எதிர்க்கட்சி தலைவர் பதவி?
அடுத்த எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் எதிர்வுகூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இதனை கூறினார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வரவுள்ளார்.
அவர் நாடாளுமன்றத்திற்கு வரும் நிலையில் எதிர்க்கட்சியில் இருந்து 15 பேர் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூடி அவசர அவசரமாக பிரேரணை ஒன்றினை நிறைவேற்றி சஜித் பிரேமதாசவே எதிர்க்கட்சி தலைவர் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
ஆனால் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதிலும் பத்து பேர் ரணிலை ஆதரித்து கையொப்பமிட்டுள்ளனர். ஆகவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும் ஒருவார காலமே உள்ளது. சரியாக ஒரு வார காலத்தில் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருவார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்ரமசிங்கவே எதிர்க்கட்சி தலைவர்.
இப்போதும் பிரபல ஹோட்டல் ஒன்றில் முக்கிய சிலர் ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிந்துகொண்டேன் என்றார்.