ரணிலின் தந்திரமான நரிச் செயல் - ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்கிறார் ரில்வின் சில்வா
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தந்திரமான நரிச் செயல்களை நாட்டில் நடைமுறைப்படுத்த தமது கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்படாத அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒருபோதும் மக்கள் போராட்டங்களை நிறுத்த அதிகாரமில்லையென இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
மக்கள் புரட்சி
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு தனிப்பட்ட கோபம் உள்ளது. மக்கள் புரட்சி அவருக்கு சவாலாக அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எந்தவொரு அரசியல் கட்சியினாலும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மக்கள் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே முன்னெடுத்தார்கள்.
எனினும், அதிபர் இதனை வேறுவிதமாக அர்த்தப்படுத்தி அரசியல் கட்சிகளை மக்கள் போராட்டத்துக்குள் திணிக்க முயற்சிக்கிறார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை நாம் பொருட்படுத்தப் போவதில்லை. அவரது மிரட்டல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் நாம் பயப்பட போவதில்லை.
பொருளாதார நெருக்கடி
நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வை காணாது அதிபர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார்.
ரணில் விக்ரமசிங்கவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் அதிபராக்கியது ராஜபக்ச குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காகவே. மக்கள் வாக்குகளின் மூலம் அவர் அதிபராக்கப்படவில்லை.
ஜனநாயக ஆட்சிக்குள் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை எமது கட்சி உருவாக்கும். அது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும்” - என்றார்.