அதிபருடனான பேச்சு திருப்திகரமானதாக அமையவில்லை - கலையரசன்
அதிபருடனான பேச்சுவார்த்தை என்பது திருப்திகரமானதாக அமையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு, அம்பாறை இலங்கை தமிழரசுக் கட்சி கிளை ஏற்பாடு செய்த வலிசுமந்த முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்வின் 14 ஆவது நிறைவினை அனுஷ்டிக்கும் முகமாக நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலய சூழலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதய சுத்தியின்றி அழிக்க திட்டம்
அங்கு கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம் கையாள்கின்ற ஒவ்வொரு விடயங்களையும் பொதுமக்களாகிய நீங்கள் அவதானிக்க வேண்டும்.
1983 ஆண்டு எமது இனம் நாடு பூராகவும் அழிக்கப்பட்ட பின்னர் 2009 ஆண்டு மீண்டும் மிக மோசமாக அழிக்கப்பட்டது.
இவ்வாறான விடயங்களை எமது இளைய சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எதிர்காலத்தில் எமது இனம் எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துகின்றோம்.
இந்த நாட்டின் தலைவர்கள் எந்தவித இதய சுத்தியின்றி எம்மை எவ்வாறு அழிக்க வேண்டும் என்பதை எண்ணிக்கொண்டிருக்கின்றனர்” - என்றார்.
