திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்த ரணில் பணிப்புரை
திருகோணமலையிலுள்ள மேல் எண்ணெய் தாங்கி வளாகத்திலுள்ள 61 எண்ணெய் தாங்கிகளை புனரமைக்கும் திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் என்வற்றின் ஒத்துழைப்புடன் இந்த அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.
கண்காணிப்பு விஜயம்
திருகோணமலைக்கு பயணம் செய்த அதிபர் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இந்தியன் எண்ணெய் நிறுவன எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
திருகோணமலை இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு சென்ற அதிபரை முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா வரவேற்றார்.
அவற்றின் செயற்பாடுகளை பார்வையிடச் சென்ற அதிபருக்கு, அந்த முனையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அதிபர் பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத திருகோணமலை எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையம் அதிபர் சுட்டிக்காட்டினார்.
இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலக்கும் ஆலையையும் அதிபர் பார்வையிட்டார். வருடத்திற்கு 18000 கிலோ லீற்றர் கொள்ளளவைக் கொண்டுள்ள இந்த ஆலை மூலம் நாட்டின் மசகு எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது.
மேல் தாங்கி வளாகத்திற்கு விஜயம்
அத்துடன் எண்ணெய் களஞ்சிய முனையத்தில் அமைந்துள்ள அதிநவீன ஆய்வு கூடத்திற்கு சென்ற அதிபர், அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், இலங்கையின் முதலாவது உள்நாட்டு கிரீஸ் உற்பத்தி ஆலையையும் பார்வையிட்டார்.
வருடாந்தம் 3000 மெற்றிக் தொன் கொள்ளளவைக் கொண்ட இந்த கிரீஸ் உற்பத்தி ஆலையானது நாட்டின் மொத்த கிரீஸ் தேவையையும் பூர்த்தி செய்வதோடு தற்போது கிரீஸ் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் திறனையும் கொண்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் இணைந்து முன்னெடுக்கும் 61 எண்ணெய் தாங்கிகளை உள்ளடக்கிய மேல் தாங்கி வளாகத்திற்கு விஜயம் செய்த அதிபர் அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
இதேவேளை, இரண்டாம் உலகப் போரின் போது குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் தாங்கி வளாகத்தையும் அதிபர் பார்வையிட்டார்.
நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முறையாகப் பேணுவதற்கு இந்தியன் எண்ணெய் நிறுவனம் ஆற்றிய அர்ப்பணிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க பாராட்டினார்.
