வோல்வர்ஹாம்டன் சாட்சியங்கள்! ரணில் விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை மீது வலுக்கும் சந்தேகம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வந்த அழைப்பின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்காக பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) குழு, வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தவறிவிட்டதாக, ரணில் விக்ரமசிங்கவின் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரியும் அதிகாரிகளிடமிருந்து மட்டுமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக வழக்கறிஞர் குமார் துனசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு 07, ஃப்ளவர் வீதியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சமன் ஏகநாயக்கவின் வழக்கு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளிடமிருந்து மட்டுமே குற்றப் புலனாய்வுப் பிரிவு குழு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்திற்கான முன்னாள் இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடமிருந்தும் அவர்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். எனினும், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய எவரிடமிருந்தும் எந்த வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படவில்லை.

சட்டக் குழு விரைவில் தங்கள் கூற்றுக்களை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.
ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்கவின் வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த துனசிங்க, ஏகநாயக்க தலைமறைவாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
ஏகநாயக்கா தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு நியாயப்படுத்தும் விதிவிலக்கான சூழ்நிலைகளை முன்வைக்கத் தவறியதால் பிணை மறுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு
இதேவேளை ரணிலின் சட்டக் குழுவில் ஒரு பகுதியாக இருக்கும் வழக்கறிஞர் தினேஷ் விதானபத்திரண, ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான சமூக ஊடக விமர்சனத்தின் தாக்கம் குறித்து கவலை தெரிவித்தார்.

"சில சமூக ஊடகப் பதிவுகள் ரணில் விக்ரமசிங்கவை விக்ரமசிங்கவை மோசமாக பாதிப்பதாகவும் இத்தகைய உள்ளடக்கம் இயற்கை நீதியின் கொள்கைகளின் பயன்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும்" என்று அவர் கூறினார்.
ரணிலுக்கு எதிரான வழக்கு அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியதுடன் இங்கிலாந்து பயணம் குறித்த விசாரணையை நடத்தும் நிறுவனம் ஷானி அபேசேகர தலைமையில் உள்ளது என்றும், அவர் 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்திக்காக பிரச்சாரம் செய்ததாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |