சஜித்தின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட நடந்த சூட்சுமம்
மக்களின் போராட்டம் காரணமாக முன்னாள் நிதியமைச்சர், பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் முறையே வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில், சூட்சுமமாக மொட்டுக் கட்சித் தலைவர்களால் தங்களுக்கு நட்பாக இருக்கும் ஒருவரை அதிபராக நியமித்துக்கொண்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம பெரலிஹெலவில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (30) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“மக்கள் போராட்டத்தால் இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்ட அதிபர் - பிரதமர் - நிதி அமைச்சர்களுக்குப் பதிலாக, தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரையே நாட்டின் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டிய தேவை அன்று அவர்களுக்கு ஏற்பட்டது.
அன்று என்னை பிரதமர் பதவிக்கு அழைத்து, சில நாட்களுக்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து எனது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுக்கு கட்டுவதையே அவர்கள் எதிர்பார்த்தனர்.
ஏமாற்று வித்தை
இதனைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் அரசியலில் அனுபவம் இல்லாதவர் அல்ல. இதுபோன்ற ஏமாற்று வித்தைகளை நம்பி ஏமாற மாட்டேன்.
அரசாங்கம் தொடர்ந்து செயற்பட முடியாது என்பதை நிரூபித்துள்ளது. இவ்வாறான அரசாங்கத்திடம் நாம் தேர்தலை மட்டுமே கோருகிறோம்” என்றார்.

