மீண்டும் சிக்கலில் மாட்டிய ரணில் : இங்கிலாந்துக்கு விரைந்த குற்றப் புலனாய்வுக் குழு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராயும் நோக்கில் ஐவரடங்கிய குற்றப் புலனாய்வு குழு இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.
இன்று (16.11.2025) வெளியான ஆங்கில செய்தித்தாளில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இங்கிலாந்தில் உள்ள இலங்கை முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் குறித்த குழுவினர் நாளைய தினம் (17.11.2025) வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கான உயர்ஸ்தானிகர்
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்திருந்த ரணில் விக்ரமசிங்க, இங்கிலாந்தில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள சென்ற போது, சரோஜா சிறிசேனவே இங்கிலாந்துக்கான உயர்ஸ்தானிகராக செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் சரோஜா சிறிசேன, அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த இரு நாள் பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபாய் பொது நிதியை, தனிப்பட்ட பயணத்துக்காக முறைகேடாக பயன்படுத்தியுள்ளமை தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |