தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயார் - சீ.வீ.கே.சிவஞானம்!
அனைவரும் ஏகமனதாக என்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தலைமை பொறுப்பு
மேலும் தெரிவிக்கையில்,
"நான் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை, முரண்பாடு இல்லாத நிலையேற்பட்டு அனைவரும் ஏகமனதாக தெரிவு செய்வார்களாக இருந்தால், போட்டியில்லாது அனைவரதும் ஒத்துழைப்போடும், இணக்கப்பாட்டோடும் அதை நான் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளேன்.
ஒருமனதாக முரண்பாடு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டால் நான் அந்த கடமையினை சரிவர செய்யக்கூடிய ஆற்றல், பொறுப்பு எனக்குள்ளது.
அதற்காக நான் யாரையும் குறை சொல்லி, யாரையும் கழுத்தறுத்து பதவிக்கு வர விரும்பவில்லை.
தலைமைக்கு தகுதியுடையவர் என என்னை பலர் கேட்கின்றார்கள், சொல்லுகின்றார்கள் என்பது உண்மை.
இருந்தாலும் கூட எங்களுடைய கட்சி ஒற்றுமையாக போக வேண்டும்.
ஒருமனதாக கட்சி போக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. அவ்வாறு இணக்கப்பாடு வந்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்." என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
