இலங்கையில் வெடித்த கலவரம்!! வெளிவரும் பின்னணிகள்...!
அலரிமாளிகை முன்பாக இருந்த போராட்ட காரர்களை கோபத்துக்கு ஆளாக்கிய செயற்பாட்டை அறிவற்றதொரு அரசியல்வாதிகள் குழுவொன்றே மேற்கொண்டதென தான் ஒப்புக்கொள்வதாக பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை தனது உரையின் மூலம் உறுதிப்படுத்திய ரமேஷ் பத்திரன, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்த கருத்து தான் இந்தச் சம்பவத்தின் யதார்த்தம் என்றும் தெரிவித்தார்.
நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ஈடுபட்டிருந்த போதிலும், இதில் நேரடியாக தலையிட வேண்டாம் என காவல்துறைமா அதிபர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவருக்கு பணிப்புரை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
காலிமுகத்திடல் சம்பவத்திற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் காவல்துறைமா அதிபர் ஆகியோர் நேரடியாகப் பொறுப்புகூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
எரிவாயு இல்லாத, எண்ணெய் இல்லாத, உர நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் மக்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தமே நாடு தழுவிய தீ வைப்பு சம்பவங்களுக்கு காரணம் என ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.