சுரேஷ் சலே கைதின் பின்னணி! வெளியானது காரணம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது சுமத்தப்பட்ட ஐந்து முக்கிய குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்போது, உயிர்த்த ஞாயிறு நடந்த தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகள் தொடர்பான சதித்திட்டங்கள் மற்றும் ஆதாரங்களை மறைக்கும் செயல்பாட்டில் அவர் ஈடுபட்டதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைதுக்கான காரணம்
இந்த நிலையில், அவரின் கைதுக்கு பின்வரும் காரணங்கள் வெளியாகியுள்ளன.

- நீர்கொழும்பு பகுதியில் உள்ள தேவாலயங்கள் குறித்த ரகசியத் தரவுகளை இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் மூலம் சேகரிக்க சந்தேகத்திற்கிடமான இளைஞர்கள் குழுவைப் பயன்படுத்தியமை.
- சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் சாரா ஜாஸ்மின் இறந்துவிட்டார் என்ற தவறான தகவலை ஏற்படுத்துவதில் நேரடியாகத் தலையிட்டு, அவர் பற்றிய தகவல்களை மறைத்தமை.
- தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவந்தபோது அவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மறைத்து, விசாரணை செயல்முறையைத் தடுக்கத் தலையிட்டமை.
- பயங்கரவாத நடவடிக்கைகளை இயக்குபவர்கள் வெளிப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்தமை.
- அனைத்து தாக்குதல்களையும் திட்டமிடுவதில் குற்றவியல் சதித்திட்டத்திற்கு பங்களித்தமை.
மேற்படி, குற்றச்சாட்டுக்களால் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் மூன்று நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ளார்.
இந்நிலையில், விசாரணையின் மூலம் வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து மேலும் விவரங்களைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |