சஞ்சீவவைக் கொல்ல தூண்டப்பட்ட உஸ்மான்! விசாரணையில் வெளிவரும் முடிவற்ற மர்மங்கள்
புதுக்கடை நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த பாதாள உலகத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்யும் நடவடிக்கைக்கு கைத்துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் கம்பஹா உஸ்மான் என்ற உஸ்மான் குணசேகர கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹாவில் நேற்று(14.05.2026) இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பில் கொழும்பு குற்றப் பிரிவினரால் 69 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கம்பஹா, போதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இந்தக் கைது நடவடிக்கை நடைபெற்றது.
துருக்கியத் தயாரிப்பு துப்பாக்கி
அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த துருக்கியத் தயாரிப்பு ரகத் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கூடுகள் மற்றும் பத்து தோட்டாக்கள் ஆகியவையும் காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டன.

அந்த ஆயுதம் அவரது மனைவியின் சகோதரர்களில் ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டாலும், இந்தக் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட அதே ஆயுதம்தானா என்பதை உறுதிப்படுத்த காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தக் கொலைச் சதித்திட்டம் ஒரு திரைப்படத்தைப் போன்ற பாணியில் அரங்கேற்றப்பட்டது.
சட்டத்தரணி வேடமிட்டிருந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண், சட்டப் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை, சட்டத்தரணி வேடமிட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் ஒப்படைத்தார்.
அதைத் தொடர்ந்து, நீதிமன்றக் கூண்டிலேயே சஞ்சீவவின் உயிர் பறிக்கப்பட்டது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் புத்தளத்தில் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு உதவிய சட்டத்தரணியும், செவ்வந்தியும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை, பாதாள உலகத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் இரத்தப் பகையின் விளைவாகும்.
கம்பஹா உஸ்மான், கணேமுல்ல சஞ்சீவவின் தரப்பால் நடத்தப்பட்ட மூன்று முந்தைய துப்பாக்கிச் சூடுகளிலிருந்து தப்பியுள்ளார் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டில், கிரிண்திவெலவில் அவரது வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒரு பணியாள் படுகாயமடைந்தார்.
மேலும், 2024 சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது அவரைக் கொலை செய்ய நடந்த ஒரு முயற்சி, அப்போதைய மேற்கு வடக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் டபிள்யூ. ஏ. பியசிறி தலைமையிலான குழுவினரால், நான்கு டி-56 தானியங்கித் துப்பாக்கிகளுடன் வந்த ஐந்து சந்தேக நபர்கள் சுற்றிவளைக்கப்பட்டபோது முறியடிக்கப்பட்டது.
உஸ்மான் குறித்த தகவல்
தன்னைக் கொல்ல முயன்ற எதிரிக்கு எதிராக, சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தார பத்மே, பட்டுவத்த சாமர மற்றும் கமாண்டோ சலிந்து போன்ற பிற பாதாள உலகக் கும்பல் தலைவர்களுடன் இணைந்து உஸ்மான் இந்த எதிர்த்தாக்குதலைத் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் பதுங்கியிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை சி.ஐ.டியால் நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்ட பட்டுவத்த சமர, உஸ்மான் குறித்த இந்த முக்கியத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேற்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைத் தலைவர் சஜீவ மெதவத்த மற்றும் கொழும்பு மாவட்டப் பொறுப்பு பிரதி காவல்துறைத் தலைவர் நிஷாந்த டி சொய்சா ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரிலும், கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர் சியவ காவல்து கண்காணிப்பாளர் லொக்கு ஹெட்டி, பிரதான காவல்துறை ஆய்வாளர்கள் அருண கிரிஷாந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாசிரியர் கபில ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரிலும் இந்த விரிவான புலனாய்வு தொடங்கப்படுகிறது.
இதன்படி கம்பஹாவைச் சேர்ந்த உஸ்மான், நீதிமன்ற வளாகங்களில் கொலைகளைத் திட்டமிடுவதில் புதியவர் அல்லர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், 1991 நவம்பர் 25 அன்று, அத்தனகல்ல நீதிமன்ற வளாகத்திற்குள், அப்போதைய வீரகுல காவல் நிலைய பொறுப்பதிகாரியான உதவி ஆய்வாளர் தம்மிக பிரசன்ன சந்திரசேன மற்றும் அவரது மாமனாரும் கம்பஹா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி.எச். விஜேசேகரா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும் அவரே பிரதான சந்தேக நபராக இருந்தார்.
அப்போது, அவரைக் கைது செய்பவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என காவல் தலைமையகம் அறிவித்திருந்தது.
எழுபத்திரண்டு மணி நேரக் காவல்
இந்நிலையில் ஜப்பானுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த உஸ்மான், 1993 டிசம்பர் 18 அன்று, அப்போதைய கம்பஹா காவல்துறை கண்காணிப்பாளரும் (பின்னர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருமான) காமினி டி சில்வா மற்றும் சி.ஐ.டி உதவி காவல்துறை கண்காணிப்பாளரான நிஸ்ஸங்க தர்மரத்ன ஆகியோரால் நாட்டிற்குத் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்டார். .
இருப்பினும், ஒரு நீண்ட விசாரணைக்குப் பிறகு, உஸ்மான் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது கனேமுல்ல வழக்கில் உஸ்மான் குணசேகர, தற்போது எழுபத்திரண்டு மணி நேரக் காவல் உத்தரவின் கீழ் காவல்துறை விசாரணையில் மீண்டும் தனது கடந்த காலத்தை எதிர்கொள்கிறார்.
இந்நிலையில் சஞ்சீவாவைக் கொல்வதற்காக அவருக்குத் துப்பாக்கியைக் கொடுத்தது யார் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |