புடினின் பொறுப்பற்ற பதில்! ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் - வெளியான எச்சரிக்கை
புடினின் பொறுப்பற்ற செயல்கள் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 9ஆவது நாளாக இன்றும் ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறன.
கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், காவல்துறை அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்தவர்கள் வெளியேறி உள்ளனர்.
உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அங்கிருக்கும் இந்தியர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின் எல்லைக்கு வந்துவிடுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது. முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.
நூற்றுக்கணக்கான தாய்மார்கள் போர் மண்டலத்திலிருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளுடன் எல்லையைத் தாண்டி போலந்துக்குச் சென்று உள்ளனர். ரஷ்யாவின் உக்கிர தாக்குதலில் நகரம் முழுவதும் திரும்பும் திசையெல்லாம் நெருப்பு குழம்புகளும் புகையுமாக காணப்படுகிறது.
முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் விழும் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 1.30 மணி நேரம் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு உக்ரைன் மீதான தாக்குதலை குறைக்கப் போவதில்லை என புடின் பதில் அளித்ததாக பிரான்ஸ் அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொரிஸ் ஜோன்சன் கூறும், போது ரஷ்ய அதிபர் புடினின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் இப்போது ஐரோப்பா முழுவதிலும் பாதுகாப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.