எரிபொருள் பதுக்கல் - எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள் (படங்கள்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அனைத்து எரிபொருட்களும் தீர்ந்துள்ள நிலையில், ஒரு சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மட்டும் அத்தியாவசிய தேவைக்கான எரிபொருட்கள் மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக 15 நாட்களுக்கு மேலாக மண்ணெண்ணெய் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வராத நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பின்னணியில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் (முள்ளியவளை ) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விலை கட்டுப்பாட்டு பிரிவினருக்கு தகவல் கிடைத்த நிலையில்,
இன்று மாலை குறித்த இடத்திற்குச் சென்ற விலைக்கட்டுப்பாட்டு பிரிவின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பதிகாரி கே.ரி.வசந்தசேகரன் தலைமையிலான அணியினர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 900 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அடையாளம் கண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த 900 லீற்றர் மண்ணெண்ணையினை குறித்த பகுதிக்கு வருகை தந்த மக்களுக்கு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு ஏற்ற வகையிலே ஒவ்வொருவருக்கும் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்வதாகவும், சிலர் எரிபொருட்களை இரவு நேரங்களில் பெற்றுக்கொண்டு அதிகூடிய விலையில் விற்பனை செய்வதாகவும் மக்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் நிலையில், இவ்வாறு 900 லீற்றர் மண்ணெண்ணையினை முல்லைத்தீவு மாவட்டத்தின் உடைய ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மீட்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
