நாளை முதல் மேலும் தளரும் கட்டுப்பாடுகள்
திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், மற்றும் கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை (15) முதல் மேலும் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா பரவுதல் குறைவடைந்துள்ளதால் இந்த தளர்வை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (14) வெளியிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் 25 சதவிகிதம் வரை அனுமதிக்கப்படுவர். மேலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்படலாம். மேலும், திருமணங்கள் மது இல்லாமல் நடத்தப்பட வேண்டும்.கொவிட் தொற்று பரவியதால், அனைத்து திருமணங்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட்டன.
இதற்கிடையில், ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, பல விளையாட்டு நிகழ்வுகளும் அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், உணவகங்கள் தங்கள் இருக்கை திறனில் 30 சதவீதம் வரை இடமளிக்கலாம். ஆனால் மது பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை அதிகபட்சம் 50 பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு மண்டபத்தில் நடத்தலாம்.
இதற்கிடையில், பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana), திருமணங்கள் முறையான சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.