ஸ்ரீலங்கா வந்திறங்கிய அமெரிக்க ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகள்! பின்னணியில் நடப்பது என்ன?
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் ஸ்ரீலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டமொன்றில் கலந்துக்கொள்ளும் நோக்கில், அமெரிக்காவின் ஓய்வூப் பெற்ற இராணுவ அதிகாரிகள் குழுவொன்று ஸ்ரீலங்காவுக்கு வருகைத் தந்தமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனமொன்றின் நடவடிக்கைகளுக்காக இந்த ஓய்வூ பெற்ற இராணுவ அதிகாரிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினர் சுற்றுலா விசாவின் ஊடாக நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ராஜா குணரத்னவினால், விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிலையிலேயே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் நாட்டிற்கு வருகைத் தருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கோ அல்லது வெளிவிவகார அமைச்சுக்கோ அறிவிக்கப்படவில்லை என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
வெளிவிவகார அமைச்சும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக அறிய முடிகின்றது. மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளின் போது, மியன்மாரில் இருந்த அமெரிக்க ஓய்வூ பெற்ற இராணுவ அதிகாரியொருவரும், இந்த குழுவில் இடம்பிடித்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.
அதேவேளை, குறித்த நபர், சுற்றுலா விஸாவின் ஊடாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் நாட்டிற்கு வருகைத் தரும் போது, வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது பாதுகாப்பு அமைச்சுக்கோ அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சினால் 2018ஆம் ஆண்டு எட்டப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக வைத்தே, இந்த குழுவினர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த விடயம் தொடர்பில் குறித்த அரச சார்பற்ற நிறுவனத்திடம் விடயங்களை ஆராயுமாறு வெளிவிவகார அமைச்சு உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
You may like this