வைத்தியசாலையில் கையும் களவுமாக சிக்கிய ரிசாத் பதியுதீன் - சி.ஐ.டி உடன் எடுத்த நடவடிக்கை
குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பிலிருந்த சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரை இன்றையதினம் வைத்தியசாலையிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறு திடீரென வைத்தியசாலையிலிருந்து ரிசாத் பதியுதீன் அழைத்துச் செல்லப்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி ரிஷாட் பதியுதீனின் பயன்பாட்டிற்காக, வைத்தியசாலையில் பிரத்தியேக மலசலகூடமொன்று வழங்கப்பட்டிருந்ததாக தெரிய வருகின்றது. ரிஷாட் பதியுதீன், மலசலகூடம் செல்லும் சந்தர்ப்பங்களில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், மிகுந்த அவதானத்துடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரிஷாட் பதியுதீன் மலசலகூடத்திற்கு இன்று செல்லும் சந்தர்ப்பத்தில், தனது கைகளில் இரகசியமான முறையில் கடதாசியொன்றை எடுத்து சென்றமையை குற்றப் புலனாய்வு பிரிவினர் அவதானித்துள்ளனர். இவ்வாறு தனது கைகளில் கொண்டு சென்ற கடதாசியை, மலசலகூடத்தில் துர்நாற்றம் வெறியேறுவதற்காக பொருத்தப்பட்டிருந்த காற்றாடியின் ஊடாக வெளியில் வீசியுள்ளதாக தெரிய வருகின்றது.
இதனை மலசலகூடத்திற்கு வெளியில் இருந்த CID அதிகாரிகள் அவதானித்துள்ளதுடன், குறித்த கடதாசியை எடுத்து சோதனை செய்துள்ளனர். இவ்வாறு ரிஷாட் பதியுதீனால் வீசப்பட்ட கடதாசியில், சில மருந்து வகைகள் காணப்பட்டதை, அதிகாரிகள் அவதானித்துள்ளனர். இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், ரிஷாட் பதியுதீன் அனுமதிக்கப்பட்டிருந்த 52வது விடுதியின் வைத்தியரை சந்தித்து, அவற்றை காண்பித்துள்ளனர்.
ரிஷாட் பதியுதீன் அருந்துவதற்காக வழங்கப்பட்ட மருந்துகளையே, அவர் இவ்வாறு வெளியில் வீசியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதையடுத்து, ரிஷாட் பதியுதீனின் சிகிச்சைகளை முடிவுக்கு கொண்டுவந்து, அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைய மீண்டும் அழைத்து சென்றுள்ளனர்.
இதேவேளை, பணம் செலுத்தி சிகிச்சை பெறும் தேசிய வைத்தியசாலையின் அறைக்கு தன்னை மாற்றுமாறு ரிஷாட் பதியுதீன் கோரியிருந்த போதிலும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அதனை நிராகரித்திருந்தனர்.