நன்றிக்கடனுக்காக ரிசாத்தை விடுதலை செய்ய முடியாது - அரசாங்கம் அறிவிப்பு
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஸ்ரீலங்காவின் இன்றைய அரச தலைவராக இருந்திருந்தால் ரிஷாட் பதியுதீன் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பார் என ஆளும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, நன்றிக்கடனாக ரிஷாட் பதியூதீனை காப்பாற்றுவதற்கு எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தம் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ரிஷாட் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை ஆதரித்து வாக்களித்திருந்திருந்தனர். அதன் அடிப்படையில் ரிஷாட்டின் விடுதலைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்காதா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அரசாங்கத்திற்கு உதவி செய்த எவரும் இதுவரை குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவில்லை. கடந்த காலத்தில் ரிஷாட் பதியூதீன் சஜித் அணியில்தான் இருந்தார். மூழ்கப்போகின்ற கப்பலில் இருந்து தாவுவதுபோல இன்று சஜித் பிரேமதாஸ, ரிஷாட் எமது அணியில் இல்லை என்கின்றார்.
எனினும் அவர் எந்த கட்சியில் போட்டியிட்டார்? ரணிலுடன்கூட அவர் இணையவில்லை. ரிஷாட் தலைமையிலானவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒப்பந்தமின்றி நிபந்தனையின்றி வாக்களித்தால் அவர்களுக்காக ரிஸாட்டிற்கு சார்பாக அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதில்லை. அவர்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் கடமைப்படவில்லை.
உண்மையில் ரிஷாட்டின் இல்லத்தில் நடந்த சம்பவம் பற்றியே இன்று ரிஷாட்டும் அவரது குடும்ப அங்கத்தவர்களும் கைதாகியுள்ளனர். இதனுடன் அவரது அணியிலுள்ளவர்களுக்கு தொடர்பில்லை. விசாரணைகள் நடந்துவருகின்றன. சட்டத்தை வளைத்து நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாரில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இன்று இருந்திருந்தால் ரிஷாட் பதியூதீன் இன்று விடுதலையாகியிருந்திருப்பார்.