ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் கொரிய நிறுவனம் ஒன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இம்மாதம் 31ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரராம முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிச் சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த உபாலி லியனகே என்பவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்பட மாட்டாது என்பதால், அவரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட முதலாவது சந்தேநபர்
முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்ட நீதிவான், முதலாவது சந்தேகநபரை வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டதோடு, இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அது குறித்து நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த இரு சந்தேகநபர்கள் மீதான விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான போதே இத்தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |