மன்னர் சார்லசை சந்திக்கும் ரிஷி சுனக்..! பிரதமராக பதவியேற்பு: இந்திய பிரதமர் - அமெரிக்க அதிபர் என பலரும் வாழ்த்து
இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்பு பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸ் கடந்த 20 ஆம் திகதி தனது பதவியில் இருந்து விலகினார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சொந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் அவர் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

இங்கிலாந்தில் ஆளும் கட்சித் தலைவர் தான் பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பெண் தலைவரான பென்னி மார்டண்ட் ஆகியோர் போட்டியிட முடிவு செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினர்.
எவ்வாறாயினும், வேட்பு மனுதாக்கல் கால அவகாசம் முடிய சில மணி நேரங்களுக்கு முன்பு போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மார்டண்ட் ஆகியோர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமராக நியமனம்

இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் சார்லசை சந்திக்கிறார்.
அதன்பின்னர் அவர் பிரதமராக நியமிக்கப்பட உள்ளார். ரிஷி சுனக்குக்கு உலக தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.