ஐரோப்பாவில் எகிறவுள்ள வெப்பம்: பாரிஸ் நகரை சூறையாடிய காலநிலை
ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது வெப்ப அலை இந்த வார இறுதியில் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று பிரான்சில் 21 பிராந்தியங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், வெப்ப நிலை வடக்கு நோக்கி நகர்ந்து பிரான்ஸில் ஒரு வெப்பக் குவிமாடம் உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடுமையான வெப்பத்தாக்கத்துடன் நேற்று முன்தினம் நாடு முழுவதும் இடி மின்னல் தாக்கம் மற்றும் கடும் காற்றுடன் பொழிந்த மழைக்கு இரண்டு பேர் பலியாகியிருந்தனர்.
புதிய வெப்ப அலை
பாரிஸ் நகரில் மட்டும் பல வீதிகளில் 500 முதல் 1,000 வரையான மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் புதிய வெப்ப அலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் இருந்து, தலைநகர் பாரிஸ் உட்பட்ட நகரங்களில் 30 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பம் பரவுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை போர்தோ ஓர்லியன்ஸ் நகரங்கள் மீண்டும் 40 பாகையை தாண்டும். பாரிஸ் நகரத்தில் வெப்பநிலை 38° பாகையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கும் பரவல்
இதேபோல இந்த ஆண்டின் இரண்டாவது வெப்ப அலை இந்த வார இறுதியில் பிரித்தானியாவில் பரவி அங்கும் பல இடங்களில் 30 பாகை செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை உயரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த வகையான வெப்ப அலை கோடைகாலத்தில் பிற்பகுதியில் வருவதே வழமையாக உள்ள நிலையில் தற்போது விதிவிலக்கான முறையில் ஜுன் மாதத்தில் இவ்வாறான வெப்ப அலைகள் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
