ரிஷாட் எம்.பியின் கைதுக்கு கடும் கண்டனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சிலர், சபை அமர்வுக்கு கறுப்புச்சால்வை மற்றும் கருப்புப்பட்டி அணிந்து சமூகமளித்திருந்ததுடன் கண்டன உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று புதன்கிழமை (28) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஐவரும் கறுப்புச்சால்வை மற்றும் கருப்புப்பட்டி அணிந்து வருகை தந்திருந்ததுடன் மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த சில உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன் மாநகர முதல்வர் உட்பட மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான சி.எம்.முபீத், அப்துல் மனாப், பி.எம்.ஷிபான் ஆகியோர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து உரையாற்றினர்.



