யாழில் 35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி : விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில் மாற்றம்
யாழில் (Jaffna) 35 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.
அதன்படி, இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த வீதி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியும் என க.இளங்குமரன் இன்று (17) அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த வீதியில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேரத்தை மாலை 7 மணி வரை நீடித்து தர வேணடும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை முன்வைத்ததையடுத்து, இராணுவ அதிகாரியிடம் கலந்துரையாடப்பட்டு வீதியின் போக்குவரத்து மாலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் பலாலி வீதியில், வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை - பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இரண்டு மாதங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட நிலையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் காலை 06 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மாத்திரமே குறித்த வீதி திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாலை 7 மணி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
