கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் : நீதிமன்றின் உத்தரவு
கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களையும் இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதவான் சதுரய திசாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கம்புருபிட்டிய, மாபலானையில் அமைந்துள்ள ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் இரு குழுக்களிடையே நேற்று (20) பிற்பகல் மோதல் ஏற்பட்டது.
காவல்துறையினரால் கைது
முந்தைய நாள் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் மதிப்பெண் தொடர்பான தகராறே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மோதலில் காயமடைந்த ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக நிர்வாகம் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை வளாகத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது.
பின்னர், இந்த மோதல் தொடர்பாக ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களை கம்புருபிட்டிய காவல்துறையினர் கைது செய்து இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
