உக்ரைன் போரில் வெல்ல ரஷ்ய படையின் கீழ்த்தரமான செயற்பாடு - ஐ.நா அதிகாரி அதிர்ச்சி தகவல்
உக்ரைன் போரில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காகக் ரஷ்யா கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு உள்ளதாக ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி அதிர்ச்சிகர குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.
இது தொடர்பாக ஐநா சிறப்புப் பிரதிநிதி பிரமிளா பட்டன் கூறுகையில்,
போர் உத்தி
"உக்ரைன் போரில் ரஷ்யா மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அங்கு மிகவும் மோசமான மனிதாபிமானமற்ற பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. அதற்கான அறிகுறிகள் இருக்கவே செய்கின்றன. ரஷ்ய வீரர்கள் உக்ரைன் நாட்டுப் பெண்களைக் குறிவைத்து பலாத்காரம் செய்கிறார்கள். அவர்கள் இதையே போர் உத்தியாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்காக அவர்கள் தங்கள் வீரர்களுக்கு வயாகரா போன்ற மாத்திரைகளைக் கூட விநியோகம் செய்கிறார்கள். உக்ரைன் நாட்டில் இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தைப் பகிர்ந்து கொண்டு உள்ளனர்" என்றார்.
தொடர்ந்து ஐநா சிறப்புப் பிரதிநிதி பிரமிளா பட்டன் பேசுகையில், "அங்கு பெண்கள் கடத்தி செல்லப்படுகிறார்கள். பல நாட்கள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல, சிறுவர்களையும் கூட அவர்கள் பலாத்காரம் செய்கிறார்கள். ஆண்களுக்கும் பிறப்புறுப்பு சிதைவு போன்ற நோய்கள் அங்கு ஏற்படுகிறது. இது ஒரு இராணுவ திட்டம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.
பலாத்காரம் செய்யப்பட்ட உக்ரைன் பெண்கள்
பலாத்காரம் செய்யப்பட்ட உக்ரைன் பெண்கள் பலரும் ரஷ்ய இராணுவ வீரர்களிடம் வயாக்ரா இருப்பதைப் பார்த்துள்ளனர். பாலியல் பலாத்காரத்தின் போது உக்ரைன் பெண்களிடம் ரஷ்ய வீரர்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது இது ரஷ்யாவின் மனிதநேயமற்ற கீழ்த்தரமான திட்டம் என்பது உறுதியாகிறது. இது தொடர்பாக ஐநாவும் கூட அறிக்கை அளித்துள்ளது.
போர் தொடங்கியது முதல் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களை ஐநா பதிவு செய்து உள்ளது.
இதைப் போரின் ஒரு பகுதியாகவே ரஷ்யா திட்டமிட்டுப் பயன்படுத்துகிறது. 100க்கும் மேற்பட்ட பலாத்கார சம்பவங்களை ரஷ்யாவே உறுதி செய்து உள்ளது. இந்த அறிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது ரஷ்யப் படைகள் கீழ்த்தரமான குற்றங்களைச் செய்து உள்ளது உறுதியாகி உள்ளது. நான்கு வயது சிறுமி தொடங்கி 82 வயது முதியவர் வரை யாரையும் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்" என்று கூறப்பட்டு உள்ளது.
