கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் கீவ் நகரம் முழுவதும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. சமீப வாரங்களாக ரஷ்யா தனது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கீவ் நகரம் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், போதிய ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு இல்லாததே மீண்டும் பல உயிர்களை காவுகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணை
மேலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணைகளை விரைவாக வழங்குமாறு உக்ரைனின் மேற்கத்திய கூட்டாளி நாடுகளுக்கு அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, ரஷ்யா ஏவிய 115 ட்ரோன்களில் சுமார் 90 சதவீதம் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனினும், ஏவப்பட்ட 24 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நான்கு 'சிர்கான்' (Zircon) அதிவேக குரூஸ் ஏவுகணைகளில் ஒன்றைக் கூட இடைமறிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் கிடங்குகள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன. மேலும், ஒரு மதுபான உற்பத்தி நிறுவனம், கட்டுமானப் பொருட்கள் கிடங்குகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சரக்கு விநியோக மையங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |