பிரித்தானிய 'புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு' அதிர்ச்சிகர தீர்ப்பு - உயர் நீதிமன்றம் அதிரடி
பிரித்தானியாவுக்கு அபாயகரமான கடல்வழியூடாக பிரவேசித்து வந்து புகலிடம் கோருபவர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டம் சட்டபூர்வமானதென பிரித்தானிய உயர் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றிலிருந்து 4,000 மைல்களுக்கு அப்பால் உள்ள உலகின் ஏழ்மை நாடு ஒன்றுக்கு அனுப்பும் பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டத்தை போன்ற திட்டத்தை உலகில் இதுவரை எந்த நாடும் முயற்சிக்காத நிலையில் சர்ச்சைக்குரிய இந்தத் திட்டத்துக்கு இன்று நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிட்டியுள்ளது.
ருவாண்டா திட்டம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் ருவாண்டாவுக்கு அனுப்பப்படவிருந்த எட்டு புகலிடக் கோரிக்கையாளர்களின் வழக்குகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ருவாண்டாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் அரசாங்கத்தின் கொள்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சட்ட இழுபறிகளை சந்தித்த நிலையில், அரசாங்கத்தின் இந்தத் திட்டம் சட்டபூர்வமானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறித்து பிரித்தானிய உள்துறை அமைச்சகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் சிறிய படகுகளில் ஆங்கிலக் காய்வாயை கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்க ருவாண்டா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என அரசாங்கம் கூறுகிறது.
நீதிமன்றத்தின் அங்கீகாரம்
இந்தத் திட்டத்துக்காக இதுவரை 140 மில்லியன் பவுண்ஸ் நிதி ருவாண்டாவிற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எந்த ஒரு புகலிடக் கோரிக்கையாளரும் அங்கு அனுப்பப்படாத நிலையில் இன்று இதற்கு நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிட்டியுள்ளது.
எனினும் ருவாண்டாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்க்கும் சட்டவாளர்கள் மற்றும் அகதிகளுக்கு ஆதரவான மனித உரிமை அமைப்புகள் இன்றைய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.