மீண்டும் திறக்கப்படவுள்ள சைட்டம் மருத்துவ கல்லூரி - எட்டப்பட்டது இணக்கம்!
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி சட்டபூர்வமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் அதனைத் திறக்க முடியும் எனவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாடசாலைக் கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இன்று நடந்தன. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிடித்திருந்தால் மீண்டும் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை திறக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்த்தரப்பினரும் சம்மதம்

அதன் போது, பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஆரம்பிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க விருப்பம் தெரிவித்தனர்.
மேலும் கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்து, அங்கு பயிலும் வறுமையான மாணவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை மேற்கொள்ள முடியும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிட்டார்.
எனவே அனைத்து தரப்பினரும் இணைந்து இது தொடர்பில் கலந்துரையாட முடியும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.