இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை இஷ்டத்துக்கு விற்க இடமளியோம்! சஜித் பிரேமதாச
இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு உடன்பாடில்லை. இவ்வாறான நிறுவனங்களை அரசாங்கம் இஷ்டத்துக்கு விற்க தாம் இடமளியோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பெல்வத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுடன் இன்று (2) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போது சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு
தற்போதைய அரசாங்கம் கடந்த சில வருடங்களாக இலாபத்தில் இயங்கி வந்த பெல்வத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் சீர்திருத்துவது குறித்து எதிர்க்கட்சி சாதகமான நிலைப்பாட்டில் இருந்தாலும், இலாபமீட்டும் நிறுவனங்களை தம் இஷ்டத்திற்கு ஏற்ப தனியார் மயமாக்குவதை மறுக்கிறது. இதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
செவனகல மற்றும் பெல்வத்தை நிறுவனங்கள் கடந்த பல வருடங்களாக இலாபம் ஈட்டி வருகின்றமையால், தற்போதைய வேலைத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய யுக்திகளை பயன்படுத்தி இலாபத்தை அதிகரிப்பதே மேற்கொள்ள வேண்டியது.
நிறுவனத்தின் நிர்வாகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதல்ல. எனவே இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க ஐக்கிய மக்கள் சக்தி விரும்பவில்லை.
குறித்த அரச நிறுவனங்களை அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு முறையான மூலோபாய மாற்றங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
அரச நிறுவனங்களை விற்கும் கொள்கை
எனவே, இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை விற்கும் கொள்கையை அரசாங்கம் தயவு செய்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
நஷ்டமடைந்து வரும் அரச நிறுவனங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையை ஏற்படுத்தாத வகையில் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி ஆக்கபூர்வமான கொள்கையின்படி பொதுவான உடன்பாட்டை எட்ட வேண்டும்.
பெல்வத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிராக செயற்படுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
