கல்வியை அபிவிருத்தி செய்திருந்தால் இலங்கை முன்னேறியிருக்கும் - சஜித் பிரேமதாச
நாட்டின் கல்வியை அபிவிருத்தி செய்திருந்தால் எமது நாடு இன்று உலகில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கும் நாடாக முன்னேறியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று(07) இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறு பகுதியை ஒதுக்கி இருந்தால்!
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “நாட்டின் நிலைமை நன்றாக உள்ளதாக தலைநகர் குருந்துவத்தை குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு கூறும் நபர்கள், நாட்டின் உண்மை நிலையை அறிய குளிரூட்டி அறையை விட்டு வெளியேறி கிராமம் தோறும் மூளை முடுக்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும்.
நாட்டிலுள்ள சில பாடசாலைகளைப் பார்த்தால் இடிந்து விழும் கட்டிடங்களைத் தான் காணக்கிடைக்கிறது.
இவ்வாறான கஷ்டப் பாடசாலைகளுக்கு சில கிலோமீற்றர் தூரத்தில் சர்வதேச விமான நிலையங்கள் கூட நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான பணத்தில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி நாட்டின் கல்வியை அபிவிருத்தி செய்திருந்தால் எமது நாடு இன்று உலகில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருந்திருக்கும்” - என்றார்.
