ரணிலை ஏமாற்ற சம்பந்தன் அணி பகல் கனவாம்
"சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை மிரட்டி, தாம் நினைக்கும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என பகல் கனவு காணுகிறார்கள்.
அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்." இவ்வாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபருக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இடமளிக்க மாட்டோம்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“சிறிலங்கா அதிபருக்கும் இலங்கை தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு பகிரங்கமாக இடம்பெற வேண்டும்.
அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களில் தமிழ், முஸ்லிம், சிங்களக் கட்சிகள் கலந்துகொள்ள வேண்டும்.
ஒற்றையாட்சியை நீக்கிவிட்டு நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் சமஷ்டி முறையிலான ஆட்சியை வடக்கு, கிழக்கில் ஸ்தாபிக்கலாம் என சம்பந்தன் அணியினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவும் இதற்கு ஆதரவு தரும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், அவர்களின் இந்த நோக்கங்களை நிறைவேற நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
அதிபரும் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை மீறி எதையும் செய்யமாட்டார் என்பது எமக்கு நன்கு தெரியும்." என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.