பொத்துவில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான இரண்டாம் கட்ட கலந்துரையாடல்
பொத்துவில் கனகர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்றத்தில் மீள்குடியேற்றப்படாத ஒரு பகுதி மக்களை மீள்குடியேற்றுவதற்கான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பொத்துவிலில் இன்றைய தினம்(17) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், பொத்துவில் பிரதேசசபை முன்னாள் பிரதித் தவிசாளர் பார்த்தீபன், கனகர் கிராமத்தின் கிராமசேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த கனகர் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் பல பிரயத்தனத்தின் மத்தியில் முதற்கட்டமாக 76 குடும்பங்களுக்கான காணி வழங்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

202 குடும்பங்கள் தெரிவு
குறித்த கனகர் கிராமத்தில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் முப்பது வருடங்களுக்கும் மேலாக மீள்குடியமர்த்தப்படாமல் இருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் முயற்சியால் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், சக நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், அரசியற் பிரமுகர்களின் ஒத்துழைப்பின் மூலம் 202 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அதில் முதற்கட்டமாக 76 குடும்பங்களுக்கான காணிகள் வழங்கப்பட்டன.

மிகுதி குடும்பங்களுக்கும் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இருந்தும் காணிகள் வழங்கப்படாத மிகுதி குடும்பங்கள் தங்களுக்கு காணி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
எதிர்ப்புத் தெரிவித்து
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காணிகள் வழங்கப்படாதவர்களுக்கு காணிகள் வழங்குவது தொடர்பிலான முதற்கட்ட கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்றது.

பின்னர் குறித்த விடயம் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து குடும்பங்களுக்கும் தெளிவுபடுத்தும் முகமாக இன்றைய தினம் கனகர் கிராம மக்களினால் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்து வரவேற்றதுடன், மீள்குடியேற்றப்படாத குடும்பங்களுக்கான விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.