பண்டிகை காலத்தில் பாதுகாப்பு அவசியம்: தேசபந்து தென்னகோன்
ரமழான் பண்டிகை மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (IGP Deshabandu Tennakoon) வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறை பாதுகாப்புப் பிரிவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி எதிர்பாராத விதமாக நிகழ்கின்ற நிலையில் இது விழிப்புணர்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தாக்குதல்
பொது அமைதியின்மையை தூண்டும் வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின் மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

ரமழான் பண்டிகை மற்றும் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது பாதுகாப்பிற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் அத்தோடு பாதுகாப்பு நிலைமைகள் விரைவாக மாறலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அளவில் இல்லாவிட்டாலும் ஏனைய சம்பவங்கள் நிகழலாம் அத்தோடு தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கை
அதேவேளை ரமழான் கொண்டாட்டங்களின் போது மசூதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தியுள்ளதாகவும் 7,500 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கமைய ரமழான் பண்டிகையின் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் முப்படையினரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு காவல்துறை பிரிவுகளிலும் உள்ள மசூதிகளின் மௌவ்லவிகளை சந்தித்து இந்த பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள 2,453 மசூதிகளில் 5,580 காவல்துறை அதிகாரிகள், 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1,260 முப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 22 மணி நேரம் முன்