செந்தில் குமரன் நிவாரண திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் - இருதய சிகிச்சை பிரிவு (படங்கள்)
செந்தில் குமரன் நிவாரண திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட இருதய சிகிச்சை பிரிவு ஒன்றினை , இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் திறந்து வைத்துள்ளார்.
புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன் என்பவரால் , முன்னெடுத்துச் செல்லப்படும் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் சென்ற வருட இறுதியில் "கனடா மல்லாவி" இரத்த சுத்திகரிப்பு நிலையமும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாஞ்சோலை மருத்துவமனையில் "டொரோண்டோ முல்லை" இரத்த சுத்திகரிப்பு நிலையமும் அமைத்து முல்லைத்தீவு மக்களின் பாவனைக்காக வழங்கப்பட்டது.
மக்களின் பாவனைக்காக வழங்கப்பட்டது

இதன் தொடர்ச்சியாக மாஞ்சோலை மருத்துவமனைக்கு மேலுமொரு வரப்பிரசாதமாக "மார்க்கம் முல்லை" இருதய நோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு, நேற்றையதினம் (19) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (19) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் கனகசபாபதி வாசுதேவா தலையையில் இடம் பெற்ற நிகழ்வில் ,இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்ததை தொடர்ந்து , சிரேஷ்ட இருதய சிகிச்சை நிபுணர் பூபாலப்பிள்ளை லக்ஸ்மன் கட்டிடத்தினை நாடாவை வெட்டி திறந்து வைத்தார் .

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர், சிரேஸ்ர இருதய சிகிச்சை நிபுணர் எம் குருபரன் மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பல உயிர்களை முல்லைதீவு மாவட்டம் இழந்திருக்கிறது
கடந்த காலங்களில் இந்த சிகிச்சை பிரிவு இல்லாமல் பல உயிர்களை முல்லைத்தீவு மாவட்டம் இழந்திருக்கிறது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையில் வாழும் வறிய தமிழ் மக்களுக்கு தனது நிவாரண அமைப்பின் ஊடாக கனடாவில் பாட்டு பாடி நிதி சேகரித்து பல நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வரும் பாடகர் செந்தில் குமரன், மேற்குறிப்பிட்ட திட்டங்களை விட , இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் மருத்துவர்களுடான நட்பினை ஏற்படுத்தி, மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நூற்றிற்கும் மேற்பட்ட இருதய நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து, அவர்களுக்கு மீள்வாழ்வு அளித்துள்ளார் .
கிளிநொச்சியில் நடமாடும் மருத்துவ சேவையினை கடந்த காலங்களில் ஸ்தாபித்து , படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று வைத்தியம் வழங்கும் சேவையினை தொடர்ச்சியாக வழங்கி கொண்டிருப்பது , இதனால் பயனுறும் நோயாளிகளுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கும் பெரும் உபகாரமாக உள்ளது .
இது மட்டுமல்லாமல் பல கோடிகள் பெறுமதியான வாழ்வாதாரங்கள் இவரின் நிறுவனத்தால் சிறுநீரக நோயாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றது.
மொத்தத்தில் கடந்த எட்டு மாதங்களில் மாத்திரம் 18,382,080 ரூபாய் நிதி முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பினரால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .










