அபூர்வ நிகழ்வு...! யாழில் இன்று நிழலற்ற நண்பகல்
வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் நிழலற்ற நண்பகல் என்ற அபூர்வ நிகழ்வு நிகழவுள்ளது.
சூரியனின் வருடாந்த வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் பயணிக்கின்றது.
செங்குத்தாக உச்சம்
இன்று நண்பகல் 12:10 மணி அளவில் பண்டத்தரிப்பு, தெள்ளிப்பழை, வறுத்தலைவிளான், வசவிளான், மணற்காடு ஆகிய பகுதிகளில் சூரியன் மிகச்சரியாக தலைக்கு மேல் காணப்படும்.
'நிழலற்ற' நண்பகல் என்றால் சூரியன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிகச்சரியாக 90 பாகை கோணத்தில் செங்குத்தாக உச்சம் கொடுக்கும் போது, அவ்விடத்திலுள்ள பொருட்களின் நிழல் எப்பக்கமும் சாயாமல் மிகச்சரியாக அடியில் விழும்.
இதனால் நிழல் மறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும். இதையே 'நிழலற்ற நண்பகல்' என அழைக்கப்படுகின்றது.
அதிக வெப்பமான வானிலை
நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 03.30க்கு விடுக்கப்பட்ட இந்த அறிவித்தல் நாளை வரை அமுலில் இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அதிக வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்:
போதியளவு நீர் அருந்துதல். முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல்.

அதிக சிரமமான வேலைகளைக் குறைத்துக்கொள்ளுதல். வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான மெல்லிய ஆடைகளை அணிதல்.
முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும், சிறிய பிள்ளைகளை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |