போராட்டமே எதனையும் பெற்றுத் தரும் : சாணக்கியன் இடித்துரைப்பு
போராடினால் எதனையும் பெற்றுகொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை
மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.
மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக எரிவாயுவினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் இரவு பகலாக வீதியில் உறங்கும் நிலையேற்பட்டதாக குறிப்பிட்டனர்.
இதனால் மட்டக்களப்பு பயனியர் வீதியுட்பட பல இடங்களில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
எரிவாயு விநியோகம் செய்யும் முகவர்கள் பக்கச்சார்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு விநியோகம் செய்யும் இரண்டு முகவர்கள் பக்கச்சார்பாக செயற்படுதாகவும் இது தொடர்பில் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ பாராமுகமாகயிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் மக்களுடன் பேசி நிலைமைகளை கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த பகுதியிலிருந்து மாவட்ட அரசாங்க அதிபரையும் தொடர்புகொண்டு மக்களின் நிலைமைகள் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் காரணமாக தற்போது குறித்த பகுதியிலுள்ள மக்களுக்கு எரிவாயுவினை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சாணக்கியன் கருத்து
இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே “போராடினால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச அதிகாரிகள் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.