தமிழ் பிரதிநிதிகளின் சித்து விளையாட்டுகள் - நெருக்கடி நிலையிலும் அரசியல் ஆதாய முயற்சி
தமிழர் பிரதிநிதிகளின் அரசியல் ஆதாயங்களை ஈட்டும் தந்திரோபாயங்கள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்நிய வருவாயை ஈட்டும் செயற்திட்டங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கிவரும் நிலையில், தமிழர் தாயக பிரதிநிதிகள் அரசியல் ஆதாயங்களை ஈட்டும் தந்திரோபாயங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை வரவேற்பதில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் முண்டியடித்துக்கொண்டமை அம்பலமாகியிருந்தது.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை மீளவும் திறந்து சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்ததுடன், யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான திட்டத்திற்கும் அரசாங்கம் இணங்கியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா முன்னறிவித்தபடி யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.
அமைச்சர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருவதாக செய்திகள் வெளியாகிய நிலையில், கொழும்பிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அமைச்சருடன் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டு அவருடன் தனது தொடருந்து பயணச்சீட்டையும் பதிவு செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரபட்சம் காட்டாமல் இரு தரப்பிலும் காரசார கருத்துக்கள்
அத்துடன் தன்னுடைய அழைப்பின் பேரில் தான் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாகவும் அங்கஜன் தனது உத்தியோகப்பூர்வ முகநூலில் குறிப்பிட்டு, தன்னை பின்தொடர்பவர்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
இந்த நிலையில், அங்கஜன் இராமநாதன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் வருவதை அறிந்துக்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காங்கேசன்துறைக்கு செல்வதற்காக வந்த அமைச்சரை யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் தொடருந்து தரித்து நின்ற சில நொடிகளில் பரபரப்பாக சந்தித்து வரவேற்று ஊடகங்களில் இடம்பிடித்துக்கொண்டார்.
இதன் பின்னணியில் சமூக வலைத்தளங்களில் வடக்கின் இரு பிரதிநிதிகளும் மேற்கொண்ட ஏட்டிக்கு போட்டியான பதிவுகளுக்கு சுவாரஷ்ய கருத்துக்களும் பதியப்பட்டிருந்தன. பாரபட்சம் காட்டாமல் இரு தரப்பிலும் காரசார கருத்துக்கள் பதியப்பட்டிருந்தவை பகிரங்கமானதே.
வடக்கு கிழக்கு பாகுபாடின்றி இலங்கை மக்கள் அனைவரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமக்கு தீர்வு தருமாறு வலியுறுத்திவரும் நிலையில், இவ்வாறான அரசியல் சித்து விளையாட்டக்களும் நிகழத்தான் செய்கின்றன.