பாடல் பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது : டக்ளஸ் பகிரங்கம்
தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது இளம் சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமான சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ, எழுதவோ அல்லது பாடவோ முற்படுவதை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளாக்க முடியாது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பாடலை பாடியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சங்கீதனை யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தலைமையிடம் எடுத்துச் சொல்லி விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நான் ஆட்சியில் இருந்த காலத்தில் பிரபாகரனின் படத்தின் மீது இருந்து ஈர்ப்பின் காரணமாக அவர்கள் சார் நிகழ்வொன்றில் ஓர் இளைஞன் பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட ரீசேட் ஒன்றை அணிந்து நடனமாடியிருந்திருக்கின்றார்.
கோரிக்கை விடுத்திருந்தேன்
இந்த விடயத்தை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முற்பட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக அந்த இளைஞனின் தாயார் என்னிடம் வந்து நிலைமையை கூறி தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நான் காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு தயவுசெய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவ்விடயத்தை கொண்டு செல்லாது சாதாரண சட்டங்களின் கீழ் அவ்விடயத்தை பார்க்க வேண்டும் என்று எடுத்துரைத்தேன்.
அத்துடன் அந்த இளைஞன் தவறான வழிநடத்தலால் தான் அவ்வாறு மேற்கொண்டுவிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டி அவருக்கு பொது மன்னிப்பு கொடுத்து விடுவிக்குமாக கோரியிருந்தேன். எனது கருத்தை ஏற்று குறித்த இளைஞரை காவல்துறையினர் விடுவித்திருந்தனர்.
அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதேபோன்று தற்போது யாழ்ப்பாணத்தில் மத்தியில் இருக்கும் ஆட்சியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
இதேவேளை இன்றைய ஆட்சியாளர்கள் கூட வடக்கில் தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக தமது தேர்தல் மேடைகளில் இவ்வாறான பாடல்களை ஒலிபரப்பிய அல்லது பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னெடுத்ததாக பல பதிவுகள் இருக்கின்றன.
இதேநேரம் குறித்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காவல்துறையினருடன் கதைத்து விடுவிக்கக் கூடிய ஆற்றல் இருக்கின்றதோ அல்லது எமது மக்கள் மீதான உணர்வு அவர்களுக்கு இருக்கின்றதோ தெரியாது.
எனினும் எமது மக்கள் அளித்த வாக்கின் பிரகாரம் நாடாளுமன்றில் இருப்பதால் இவ்விடயத்தை தமது தலைமையிடம் எடுத்துச் சொல்லி குறித்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு செல்லாது விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |