கலக்கத்தில் பிறக்கும் சோபகிருது தமிழ் புத்தாண்டு - கெடு பலன்கள் யாருக்கு..!
தமிழ் புத்தாண்டு, சித்திரை மாதப் பிறப்பு, சித்திரை விஷூ, மேஷ சங்கராந்தி எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படும் தமிழ் புத்தாண்டு தினம் நாளை (ஏப்ரல் 14 ஆம் திகதி) கொண்டாடப்பட உள்ளது.
பிறக்க இருக்கும் தமிழ் வருடம் சோபகிருது வருடமாகும். இந்த ஆண்டு எப்படி இருக்கும் என பஞ்சாங்க பலன்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் பிறக்கப் போகும் சோபகிருது வருடம் நவமி திதியில் பிறப்பதால் இதன் பலன் எப்படி இருக்குமோ, இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும், குழப்பமும் மக்கள் பலரிடமும் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாங்கத்தில் இந்த வருடத்திற்கு என்ன பலன் சொல்லப்பட்டுள்ளது என்பதை இங்கே காணலாம்.
தமிழ் புத்தாண்டு - 2023
பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக தமிழர்களின் பாரம்பரிய திருநாளாக கொண்டாடப்படும் நாள் தமிழ் புத்தாண்டு திருநாளாகும்.
60 ஆண்டுகளைக் கொண்டு தமிழ் ஆண்டுகளில் சுபகிருது ஆண்டு நிறைவடைந்து, சோபகிருது ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி பிறக்கவுள்ளது.
சோபகிருது ஆண்டு தமிழ் ஆண்டுகளில் 37 வது ஆண்டாக வருவதாகும்.
சோபகிருது ஆண்டு
சோபகிருது என்ற வடமொழிச் சொல்லிற்கு மங்கலம் அளித்தல் என்று பொருள். அதற்கு ஏற்றாற் போல் 2023 ஆம் ஆண்டில் சோபகிருது ஆண்டு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பிறக்கவுள்ளது.
ஆனால் அன்றைய தினம் அஷ்டமி, நவமி இணைந்த நாளாக உள்ளது. இந்துக்களின் நம்பிக்கையின் படி அஷ்டமி, நவமி என்பது சுபகாரியங்கள் செய்யக் கூடாத தவிர்க்கப்பட வேண்டிய நாட்களாக உள்ளன.
எந்த நல்ல காரியத்தை துவங்கினாலும் அஷ்டமி, நவமியில் தொடங்க கூடாது என்பார்கள்.
அஷ்டமி, நவமியில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி அதிகாலை 02.51 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதி உள்ளது. இதே போல் ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 12.31 தொடங்கி, இரவு 10.02 வரை நவமி திதி உள்ளது.
தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் பிறக்கிறது என்றாலும், அன்று நவமி திதி என்பதால் பிறக்க இருக்கும் சோபகிருது ஆண்டு எப்படி இருக்குமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
சோபகிருது ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி பஞ்சாங்கத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது? நவமி திதியில் பிறக்க போகும் புத்தாண்டில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என இங்கே பார்க்கலாம்.
பஞ்சாங்க பலன்கள்
சோபகிருது ஆண்டு மக்களுக்கு வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். மக்கள் நன்மைகளை அதிகம் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். போதிய அளவு மழை பொழியும். பழமையான நாடுகளும், நகரங்களும் புகழினை பெறும். தேசத்தின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நவீனமயமாகும். கோபம், போட்டி, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் நற்குணங்கள் மேலோங்கும். சுபகாரியங்கள் நடக்கும். புதிய வானியல் நிகழ்வுகள் கண்டறியப்படும். புண்ணிய காரியங்கள் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகள் சிறப்பாக இருக்கும். விவசாயம் செழிக்கும், தொழில் விருத்தி அடைந்து லாபம் ஏற்படும்.
சோபகிருது ஆண்டில் யாரை வழிபட வேண்டும்?
2023 ஆம் ஆண்டு சோபகிருது வருடத்தில் இலங்கை, இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் கெடு பலன்களை விட நல்ல பலன்களே அதிகம் நடக்கும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அஷ்டமி - நவமி திதி புத்தாண்டு பிறந்தாலும் அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனச் சொல்லப்படுகிறது.
நவமி என்பது 15 நாட்களுக்கு ஒருமுறை மாறும் திதிகளில் ஒன்பதாவது திதியாகும். நவமி திதி என்பது அம்பிக்கைக்கு உரியது. தேய்பிறையில் வரும் நவமியாக இருந்தாலும் சரி, வளர்பிறையில் வரும் நவமி திதியாக இருந்தாலும் சரி துர்க்கா தேவியையும், சரஸ்வதி தேவியையும் வழிபட நன்மைகள் பிறக்கும்.
வெள்ளிக்கிழமையும் அம்பிகை வழிபாட்டிற்குரிய நாள் என்பதால், அந்த நாளில் வரும் நவமி திதி அன்று புத்தாண்டு பிறப்பதால் அம்பிகையை வழிபடுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)