பேருந்தில் நடந்த அத்துமீறல்...! 14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்த சிப்பாய்
சிறுமி ஒருவரைத் தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (23-04-2026) வாழைச்சேனை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கிப் பயணிகளுடன் பயணித்த பேருந்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராணுவ சிப்பாய்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆம் திகதி பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் 14 வயது சிறுமி தனது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வதற்காகப் பயணித்துள்ளார்.
அதேவேளை, புனாணை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு சென்று திரும்பியவர், அதே பேருந்து வண்டியில் ஏறிச் சிறுமிக்கு அருகில் அமர்ந்துள்ளார்.

இதையடுத்து, மன்னம்பிட்டியைத் தாண்டிப் பேருந்து சென்று கொண்டிருந்த போது குறித்த இராணுவ சிப்பாய் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்டுள்ளார்.
இதன்பின்பு சிறுமி அருகில் இருந்த சிறிய தந்தையிடம் முறையிட்டதையடுத்து அவர் அந்த இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
தொடர்ந்து சாரதி பேருந்தை வாழைச்சேனை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தி பேருந்தில் நடந்த சம்பவத்தைத் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சிப்பாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்பு, தாக்குதலை மேற்கொண்ட சிறுமியின் சிறிய தந்தையைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் நோய் குணமாகி வார்டில் இருந்து வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு வெளியேற முற்பட்டபோது அவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த இராணுவ சிப்பாயை இன்று (24-04-2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |