அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கக் கடற்படை தற்போது 19 கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், இதில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் (Aircraft Carriers) அடங்குவதோடு இந்தியப் பெருங்கடலில் மேலதிகமாக ஏழு கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துறைமுகங்கள்
அத்தோடு ஏப்ரல் 13 முதல் ஈரானியத் துறைமுகங்கள் மீது நடைமுறைப்படுத்தப்பட்ட கடற்படை முற்றுகைப் பணிக்காக இதுவரை குறைந்தது 33 கப்பல்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்த முற்றுகையின் ஒரு பகுதியாகப் பாரசீக வளைகுடாவிலிருந்து சுமார் 2000 மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதி உட்பட இதுவரை மூன்று கப்பல்கள் அமெரிக்கப் படைகளால் ஏறிச் சோதனையிடப்பட்டுள்ளன.
இராணுவ நடவடிக்கை
இந்த இராணுவ நடவடிக்கையின் ஒரு புதிய நிகழ்வாக புதன்கிழமை இரவு இந்தியப் பெருங்கடலில் ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற தடைசெய்யப்பட்ட நாடற்ற கப்பல் (sanctioned stateless vessel) ஒன்றை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

மெஜஸ்டிக் எக்ஸ் (Majestic X) எனப்படும் இந்த ராட்சத எண்ணெய் கப்பல் (Supertanker), சுமார் 20 லட்சம் பேரல் எண்ணெயைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானின் கடல்வழி எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |