தென் கொரியாவில் பணிபுரியும் இலங்கை பிரஜைகளின் பாராட்டத்தக்க செயல்
தென் கொரியாவில் பணிப்புரியும் இலங்கை பிரஜைகளின் சிலர் பாராட்டத்தக்க செயல் ஒன்றை செய்துள்ளனர்.
எதிர்பாராத விபத்திற்கு முகங்கொடுத்த தென் கொரிய பிரஜை ஒருவரின் உயிரை இலங்கை இளைஞர் குழுவொன்று காப்பாற்றியுள்ளனர்.
அந்நாட்டில் பணிப்புரியும் இலங்கையர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட துடுப்பாட்ட போட்டியின் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சி
தென்கொரியாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவரின் சிகிச்சைக்காக பணம் திரட்டும் நோக்கில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென்கொரியாவின் நோக்சான் மைதானத்தில் இலங்கைத் ஊழியர்களால் ஏற்பாடு செய்திருந்த போட்டியின் போது, அருகில் நின்றிருந்த பாரவூர்தியில் கைத்தொழில் வேலைக்காக வந்த கொரிய பிரஜை ஒருவரின் தலை திடீரென பாரவூர்தியின் முன் பகுதியில் மாட்டிக்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட இலங்கையர்கள், கொரிய அவசர சேவையுடன் இணைந்து, விபத்தில் சிக்கிய நபரின் உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது.
மேலும் மீட்கப்பட்ட கொரிய பிரஜையை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.