பழி தீர்க்கும் NPP - வைத்தியசாலையில் ரணிலுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எட்டு சிறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் இரண்டு ஜெயிலர்கள் மற்றும் நான்கு ஆயுதமேந்திய அதிகாரிகள் அடங்குவர். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவைச் சுற்றி காவல்துறை பாதுகாப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடும் கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த (22.08.2025) குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதன்போது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது அவரது ஆரம்ப பரிசோதனைகள் மற்றும் மேலதிக சிகிச்சைக்காக என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆபத்தான நிலையில் இல்லை
சோதனைகள் முடிந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் அவர் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆபத்தான நிலையில் இல்லை என கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.
வயது காரணமாக அவரது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளோம் என பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 4 மணி நேரம் முன்
