அனோஜன் சிவராசா குறித்து வெளிவிவகார அமைச்சின் சிறப்பு அறிக்கை
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசாவுக்கு, மேல்முறையீட்டுக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் இணைந்து ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சு கூறியது.
ராஜதந்திர வழிகள் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், சிவராசாவின் நலன்களைப் பாதுகாக்கவும் அவருக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
மரண தண்டனை
இருப்பினும், அந்த அறிக்கையானது மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலை உறுதிப்படுத்தவோ அல்லது அவர் மீதான குற்றச்சாட்டுகள், மேல்முறையீட்டின் முடிவு அல்லது அவரது தற்போதைய சட்ட நிலை குறித்த விவரங்களை வழங்கவில்லை.

சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது சிவராசா சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் கருத்து ஒன்றிலிருந்தே இவ்வழக்கு தொடரப்பட்டது.
அக்குறிப்பிட்ட கருத்து இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிப்பதாகக் கருதப்பட்டது.
இலங்கையிலுள்ள மத சமூகங்களுக்கு இடையிலான இணையவழி விவாதத்தின்போது அவர் அக்குறிப்பை வெளியிட்டதாக தெரியவருகிறது.
ஜூலை 15 அன்று, சவூதி நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு
இந்நிலையில் தண்டனையைக் குறைக்குமாறு கோரி, இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் அவரது சட்டத்தரணி பின்னர் மேல்முறையீடு செய்தார்.
இதற்கமைய இடம்பெற்ற விசாரணைகளில் தற்போது அத்தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக
அதிகரிக்கப்பட்ட தண்டனைக்கான சட்ட அடிப்படையை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படும் அதிகாரப்பூர்வ எழுத்துமூலத் தீர்ப்பிற்காக இலங்கைத் தூதரகம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |