பிரிட்டன் விதித்த தடையால் புலம்பித் திரியும் சவேந்திர சில்வா
விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலை உருவாக்கியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை (Sri Lanka) ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர்.
பிரிட்டன் விதித்த தடை
2020 பெப்ரவரியில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்த தடைகள் குறித்தும், மார்ச் மாதம் பிரிட்டன் விதித்த தடைகளால் தான் தென்னாசியாவிற்கு கூட பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் போரிட்ட அதிகாரி நான். எனது மகளான யொகானி சில்வாவின் லண்டன் நிகழ்ச்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் அங்கு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை குறித்து எந்த அரசாங்கமும் எதையும் கேட்க வில்லை. அரசாங்கங்களின் இந்த தோல்வி , விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது.
ஆயுதப்படை
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா, சக்கி கலகே உட்பட படை பிரிவுகளுக்கு தலைமை வகித்தவர்கள் சர்வதேச சமூகத்தின் தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையும் மக்கள் விடுவிக்கப்பட்டதையும் நிச்சயம் கொண்டாடவேண்டும்.
முடிவிற்கு கொண்டுவரமுடியாது என பலர் நினைத்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ஆயுதப்படையினரும் காவல்துறையும் பெரும் விலையை செலுத்தினார்கள்”என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
