பிமல் ரத்நாயக்க செய்த தவறு...! மன்னிப்பு கேட்குமாறு எழும் அழுத்தம்
வாரியபொலவில் (Wariyapola) இலங்கை விமானப்படையின் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Pramitha Bandara Tennakoon) கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் விமானப்படையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த விடயங்களை முன்னாள் துணை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விமானிகளின் தவறு தான்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake), அண்மையில் இலங்கை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் விமானிகளின் தவறுதான் என்று கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது.
இதுபோன்ற ஒரு நிகழ்வின் போது விமான விபத்து குறித்து விசாரிக்க ஒரு விசாரணை நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும்.
விமானிகள் விபத்தில் இருந்து தப்பித்தால், அவர்களிடம் இருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
பின்னர் விசாரணை அறிக்கை விமானப்படை தளபதியிடம் ஒப்படைக்கப்படும் என முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கை
பின்னர் அது பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். பாதுகாப்பு அமைச்சகம் தான் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்.
அந்த வகையில் விமான போக்குவரத்து அமைச்சரின் அறிக்கை பொருத்தமற்றது.
எனவே, விமானப் போக்குவரத்து அமைச்சர், தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக இலங்கை விமானப்படையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
