அதிகரித்துவரும் பதற்றம் : ஈரான் - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு
மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பேணுவது மற்றும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தவார தொடக்கத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் பேசியதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியில் பேச்சு
அமெரிக்கா மேலும் வரிகளை விதிக்கும் என்ற அச்சத்தில் ஈரானுக்கான ஏற்றுமதியை இலங்கை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச தடைகளுக்கு முன்னர், வாங்கிய மசகு எண்ணெய்க்காக இலங்கை இன்னும் ஈரானுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தி வருவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலைக்கு பதில் எண்ணெய்
தேயிலைக்கு பதில் எண்ணெய் என்ற பண்டமாற்று உடன்பாட்டின் மூலம் இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது. இதற்காக, 2023 ஓகஸ்ட் மாதம் தொடக்கம்,இலங்கை ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இலங்கை தேயிலைச் சபைக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இதற்கான பணத்தை செலுத்துகிறது.இந்த உடன்பாட்டை இலங்கை தொடர்ந்து மதிக்கும் என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தற்போதைய நிலைமை குறித்தும் பேசப்பட்டதாகவும், ஈரானிய பொருளாதாரம் மீண்டு வருவதாக அரக்சி தன்னிடம் கூறியதாகவும், அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தொடர வேண்டும், மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என ஈரானிய வெளியுறவு அமைச்சரிடம் தான் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |