நாடளாவிய ரீதியில் களமிறக்கப்பட்டுள்ள சிறிலங்கா படைகள் - இரகசிய தகவலையடுத்து நடவடிக்கை!
சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுமார் ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் ஒரு வாரத்திற்குள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதனையடுத்து நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி விடுத்துள்ள பணிப்பு
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, கஞ்சா, ஹெரோயின், ஐஸ், சிகரெட், கசிப்பு, கோடா உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கோடிக்கணக்கான கேரள கஞ்சா
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில், கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவும் காணப்பட்டுள்ளது.
இவேளை போதைப்பொருட்களுடன் 31 சந்தேக நபர்களை கைது செய்த சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)