யாழில் உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் அமைதி வழியில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (10) 12வது வாரமாகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கு பலாலி, மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
தொடர் போராட்டம்
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்த நிலையில் இன்றைய தினம் போராட்டத்தை முன்னடுத்தனர்.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா, பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |