சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறை
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
இன்று (24) குறித்த வழக்கின் தீர்ப்பை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்தது.
நீதிமன்ற அவமதிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குறித்த தண்டனையை விதித்த நீதிமன்றம், அவருக்கு ரூ. 3 இலட்சம் அபராதத்தையும் விதித்துள்ளது.
குறித்த அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாட்சிகளை மிரட்டல்
சாட்சிகளை மிரட்டியதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் அஜித் பிரசன்ன கடந்த 2021 ஜனவரியில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தலா ரூ. 500,000 கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் அஜித் பிரசன்ன மற்றும் 2 கடற்படை புலனாய்வு அதிகாரிகள், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி சாட்சிகளை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.